ஞாயிறு, 18 அக்டோபர், 2015

நாயுருவி (Achyranthes aspera)
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண் - சித்தர் கூற்று.
கிராமபுறங்களில் கொல்லைக்காடுகளிலும், நகர்ப்புறங்களில் சாலையோரங்களிலும் வெகு சாதாரணமாய் தென்படும் இந்த நாயுருவி (Achyranthes aspera) ஒரு வெகுசக்தி வாய்ந்த மருத்துவ மூலிகைகச் செடியாகும்.இது ஒரு குத்துச்செடி வகையை சார்ந்தது.
எல்லா இடங்களிலும் தானே வளரும் தன்மை கொண்ட நாயுருவிச் செடியில் அரிதான மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றது. எப்போதும் போல நல்லவற்றை எல்லாம் நாம் கண்டுகொள்வதே இல்லைதானே.
நீள நீளமான குச்சிகளில் கீழ்நோக்கியபடி ஒட்டவைத்த நூற்றுகணக்கான அரிசிகள்தான் இதன் விதைகள். ஏதேனும் சிறு விலங்குகள் இந்த செடியை உரசியபடி ஓடும்போதோ, மனிதர்கள் இந்த செடியை உரசியபடி கடக்கும் போதோ இந்த விதைகள் அவற்றுடன் ஒட்டிக்கொண்டு விடும். அந்த விதை நன்கு காய்ந்த பின் உதிர்ந்தும் விடும். இந்த செடியின் விதைகள் பரவுவதற்காக இயற்கை அமைத்த வழிதான் இது.
இதில் செந்நாயுருவி, கருநாயுருவி, வெண்நாயுருவி என மூன்று வகைகள் இருக்கின்றன. இந்த மூன்று வகைகளுமே மருத்துவ குணம் சார்ந்தது என்றாலும் கருநாயுருவி ("கரு"நாயுருவி) தான் கிடைத்தற்கரியது. கருநாயுருவி கஷாயத்தை கர்ப்ப காலத்தில் மூன்று வேளை கொடுத்தால் சுகப்பிரசவம் ஆகும் என்கிறது சித்தர்களின் மூலிகை ஆராய்ச்சி முடிவுகள்.
சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி,அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம் என்று பல பெயர்களில் இந்த மூலிகை சித்தர்களின் குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.
மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, பாறையில் துளையிட்டு வளரும் ஆற்றல் பெற்றது. இதனால் இதற்கு கல்லுருவி என்றொரு பெயருமுண்டு.
இந்த செடியின் வேரை வாயினுள் சில மணி நேரங்கள் வைத்து இருந்தால் நா வன்மை பெருகுமாம். நாவுருவி என்ற இதன் உண்மையான பெயர் மருவி நாயுருவி ஆகி இருக்கலாம்..
நாயுருவியின் இலை முதல் வேர் வரை எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. மனிதனின் சிறுநீரக உறுப்புகளை சரிவர இயங்கச் செய்யும். நோய்களை நீக்கி உடலைத் தேற்றும். தேவையற்றச் சதைகளை நீக்கும். நரம்புகளை சரிவர இயங்கச் செய்யும். இதுவே இவற்றின் பொதுவான மருத்துவ குணங்கள் ஆகும்.
நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். (நாயுருவியுடன் கிராம்பு, வேம்பு, சுக்கு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஏல அரிசி, கருவேலப்பட்டை, இந்துப்பு போன்றவற்றைச் சேர்த்து பற்பொடியும் தயாரிக்கலாம்.)
நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கினால் கறைகள் இல்லாமல், பற்கள் பளிச்சென்ற வெண்மை நிறம் பெறும்.
பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி, பற்களில் உண்டாகும் கூச்சம், சொத்தை, ஈறுகளில் உண்டாகும் வலி, வீக்கம் என வாய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும், நீக்குவதுடன் பற்களை பளபளவென மின்னச் செய்யும்.
நாயுருவி வேரால் 48 நாட்கள் தொடர்ந்து பல் துலக்கி வர பற்களோடு சேர்ந்து முகம் அழகு பெறும். வசீகரம் கூடும். வாக்கு வன்மை உண்டாகும். சொன்னது பலிக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். மனசக்தி அதிகமாகும். நினைத்தவை நடக்கும்.
முகம் பொலிவு பெற்று, பேச்சில் தெளிவு கூடும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் தன்னம்பிக்கை பெருகும். தன்னம்பிக்கை பெருக பெருக அது ஏற்படுத்தும் சக்தி அலைகள் மற்றவரை வசியம் செய்யும். அதனால் இதை ஒரு வசிய மூலிகை என்றும் கூறலாம்.
மேலும் நாயுருவி செடியின் இலை முதல் வேர் வரை மருத்துவ மகிமைகள் கொட்டிக் கிடக்கின்றன. இம் மூலிகையைக் கொண்டு நம் சித்தர்கள், முன்னோர்கள் அதீத பசி, மூலம், கண் நோய்கள், பல், ஈறு சம்பந்தப்பட்ட வியாதிகள், காதில் சீழ் வடிதல், இருமல், அனைத்து வகையான காய்ச்சல்கள், இருமல், பேதி , மலசிக்கல், மூலம், நீர்கட்டுபோன்ற வியாதிகளில் இருந்து எளிய முறையில் தீர்வும் கண்டுள்ளனர்.
சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், இரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்ற மனிதர்களை மிரட்டும் வியாதிகளில் இருந்தும் முழுவதுமாய் குணமாக்கும் ஆற்றல் மிக்கது இந்த நாயுருவி.
மாதவிடாய்க் கோளாறுகள் ,வெள்ளைப்படுதல், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், வெப்பக்கட்டிகள், தேமல், படை, சொறி, தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இம்மூலிகைப் பயன்படுகிறது. உடம்பில் நீர் கோர்த்தல், ஊதுகாமாலை, நீரிழிவு நோய், ஆறாத புண்கள், சீழ்வடியும் புண்கள், வெட்டுக் காயங்கள், விஷக்கடி போன்றவையும் முற்றிலும் குணமடையும்.
மன நோய்கள், மன பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு போன்ற மனம், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்தும் அதிசயத்தக்க வகையில் பூரண குணம் பெறலாம்.
இதன் விந்தையான குணத்தால் சித்தர்கள் இரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்துள்ளனர். நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டு, பசியையும், உணவையும் தவிர்த்து, காட்டிலேயே மனிதர்கள் கண்ணில் படாமல் இருக்க அவர்கள் மேற்கொண்ட எளிய வழிகளில் இதுவும் ஒன்றாம்.
மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாய் அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் பொடியை கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர, உடல் இரும்பைப் போல் உறுதியாகும். யானை பலத்தையொத்த அபார உடல்திறன், உடல் வனப்பு, முக வசீகரம் ஆகியன உண்டாகும்.
நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் அனைத் தும் தீரும்.
நாயுருவி இலையை வதக்கி மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து வைக்கும் குழம்பு மிகவும் அருமையான ருசியில் இருக்கும். யார் வைத்தாலும் அம்மாவின் கைமணம் கட்டாயம் இருக்கும். வாரம் ஒரு முறையாவது இதை உட்கொண்டு வந்தால், இம் மூலிகை தன்னுள்ளே கொண்டுள்ள மருத்துவ குணத்தால் உடல்நலனை பாதுக்காக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
உட்கொண்டாலும் மருந்து, அரைத்து பூசிக்கொண்டாலும் மருந்து.
அதுமட்டுமல்ல காய்ந்த செடிகளை எரித்து அதன் புகையை சுவாசித்தாலும் அதுவும் மருந்து. எறிந்த சாம்பலை குழைத்து பூசினாலும் மருந்து.
இந்துக்களின் பூஜை முறைகளில் ஹோமம் வளர்க்கும் முறையில் ஆல், அரசு குச்சிகளுடன் நாயுருவியும் இருப்பதை நாம் கண்டிருப்போம். ஆம். இது ஒரு தேவ மூலிகை.
ஃபார் எக்ஸ்டெர்னல் யூஸ் ஒன்லி என்று எச்சரிக்கை தாங்கிவரும் இரசாயண மருந்துகளை தவிர்த்து நாயுருவி போன்ற இயற்கை கொடுத்த சீதனங்களை உபயோகிப்பதன் மூலம் பக்கவிளைவுகளை தவிர்த்தும், உடலுக்கு வலுவூட்டியும் ஆரோக்கியம் காக்கலாமே!!!
ஓரிரு தொட்டிகளிலோ, காம்பவுண்ட் /வேலி ஓரத்திலோ ஓரிரு செடிகள் வளர்த்தால் போதுமானது. உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்து கூண்டு அமைத்து, உரம் போட்டு எல்லாம் வளர்க்க வேண்டிய கட்டாயமில்லை.
மக்கள் நலனிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கும் இந்த அற்புத மூலிகைக்கு கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும், எப்போதாவது கொஞ்சம் இயற்கை எருவும் போனால் போகிறதென்று கொடுங்கள்.
இனி வேறொரு அரிதான மூலிகையோடு சந்திக்கறேன்.
மூலிகைகள்- சிறு தேடல்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
சித்தர்கள் இயற்கையில் விளைந்த மூலிகைகள் மூலம் மனித இனத்தை நோயில்லாமல் பாதுகாக்கவும், மனிதர்களைத் தாக்கும் நோய்களை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தவும், பல அரிய நூல்கள் மூலம் இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
சிறு வயதில் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் மூலிகைகளை கண்டும், உண்டும் இருக்கலாம். இப்போது மூலிகைகளின் பெயர்களை கேட்கத்தான் முடிகிறது. பார்ப்பது, உண்பது எல்லாம் அரிதாகி விட்டது. நம்மில் பலர் அதை கண்ணால் கூட கண்டதில்லை.
சித்தர்கள், முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்திச் சென்ற பல அதிசய மருத்துவ மூலிகைகளின் பலன்களை நம்மில் உணர்ந்தவர்கள் எத்தனை பேர்???
குழந்தைப் பருவத்திலிருந்தே இனம் புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் இன்று மனித இனம் சிக்கித் தவிப்பது மறுக்க முடியாத உண்மை. நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்ததைப் போல் நாமும் வாழ்கிறோமா என்ற கேள்வி நம்முள் வராமல் இல்லை.
இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம். நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை, அதன் அருமை, பெருமை புரியாமல் தவிர்த்து விட்டு, இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது, மூலிகைகள் எதுவுமே நம் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இல்லை.
இதற்கு தீர்வு தான் என்ன?
இனி வரும் காலங்களில் நம் வீடுகளில் பத்து மூலிகை செடிகளையாவது வளர்த்து, நோயில்லா உலகைப் படைப்போம்.