புதன், 25 பிப்ரவரி, 2015

எட்டு நடை பயிற்சி

எட்டு நடை பயிற்சி
* * * * * * * * * * * * * * * *
நவீன விஞ்ஞானத்தின் செயற்கை வெளிச்சத்தாலும், உடனடியாக கிடைக்கும் தற்காலிக நிவாரணத்தாலும், அதிகபட்ச விளம்பரத்தாலும் மக்கள் மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்த நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளும் , வாழ்க்கை முறைகளும், வைத்திய முறைகளும் இயற்கையான நிரந்தர வெளிச்சத்திற்கு வரத்தொடங்கி இருக்கிறது.
ஆங்கில மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டு வந்த நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் இன்றைக்கு அவர்களாலேயே ஒவ்வொன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்கவிளைவுகளை அவர்களே இப்போது ஒத்துக் கொள்கிறார்கள்.
பல்வேறுபட்ட சொந்த அனுபவங்களாலும், கேள்வி ஞானத்தாலும் அதனை உணரத்தொடங்கிய மக்களும், அந்த செயற்கை வெளிச்ச மாயையில் இருந்து மீண்டு, பக்கவிளைவுகளை தரும் உடனடி நிவாரணத்தை விட, "கொஞ்சம் கால அவகாசம் எடுத்தாலும் பரவாயில்லை" என்று ஆரோக்கியத்தை மீட்டுத்தரும் இயற்கை-பாரம்பரிய வைத்திய முறைகளை நாடத்தொடங்கி இருக்கிறார்கள்.
ஆங்கில மருத்துவ முறையை விட்டு வெளியேறும் நோயாளிகள் எத்தனை பேர் என்பதை இன்று வரை சரியான முறையில் கருத்துக் கணிப்பு நடத்தப்படவில்லை என்றாலும் அக்கம் பக்கம் பார்க்கும் பொழுது அந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாமே கண் கூடாக உணரலாம். இருந்தாலும், "ட்ரக் மாஃபியா" என்று சொல்லப்படுகின்ற மருத்துவ/மருந்து வியாபாரிகளின் தந்திரத்தால் நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைக்கு சரியான முறையில் அங்கீகாரம் கிடைக்க வில்லை என்பது வருந்தக்கூடிய நிகழ்வு.
இருநூறு ஆண்டுகள் கூட நிறைவடையாத ஆங்கில மருத்துவம், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இயற்கை வைத்திய முறைகளை, "மாற்று மருத்துவம்" என்று சொல்வது நகைச்சுவையான விஷயம். நியாயமாய் பார்த்தால் நம் பாரம்பரிய வைத்தியத்திற்கு மாற்றாகத்தான் ஆங்கில மருத்துவம் வந்தது. இந்த உலகத்தின் நகர்வை பணம் தான் தீர்மானிக்கிறது.பணத்தால், இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை "இல்லை" என்று சாதிக்கவும் முடிவதால் , நம் பாரம்பரிய வைத்திய/உணவு /வாழ்க்கை முறைகள் எல்லாம் "மாற்று மருத்துவம், மாற்று வாழ்க்கை முறை" என்ற அடை மொழியை சுமக்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.
இவையெல்லாம் நமது ஆதங்கம். நமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளால் எப்படி ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இப்போது "எட்டு நடை பயிற்சி" பற்றியும், அதன் செயல்முறை, பலன்கள் பற்றியும் ஒரு சிறு பதிவு .
இந்த எட்டுநடை கொரியா, தைவான், ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி முறையாக கற்றுகொடுக்கிறார்கள். நம்ம நாட்டிலும் ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திடறேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய் வந்திறேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தவறான புரிதல் என்றே தோன்றுகிறது.
வீட்டிலேயே காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும் இடமாக தேர்வு செய்து ஆறு அடி விட்டமுள்ள இரு வட்டங்களை ஒன்றை ஒன்று தொட்டிருக்கும் படியாக எட்டு (8) வடிவில் தரையில் வரைந்து கொள்ள வேண்டும். அந்த பாதையில் கூழங்கற்களை பதித்தால் பலன் இன்னும் அதிகம். அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த நடைபயிற்சி அமைந்திருக்கிறது.
பாதையில் செய்யும் நடை பயிற்சியில் கவனச் சிதறல் இருக்கும். மற்றவர்கள் மீதும் வாகனங்கள் மீதும் கவனம் போகும். நம்மோடு பாதையில் நடை பயிற்சி செய்பவர்கள் இருந்தால் அவர்களோடு பேசுவது டீ, காபி குடிப்பது என்று பல இடையூறுகள் வரும். ஆனால் இந்த எட்டு வடிவ நடை பயிற்சியில் அவ்வாறான கவன சிதறல்கள் இடையூறுகள் இருக்காது.
எட்டுநடையால் ஏற்படும் பலன்கள்
தினசரி இந்த பயிற்சி செய்வதால் அதிக தொல்லை தரும் வியாதிகள் நம் உடலை விட்டு வெளியேறும். பாதங்களும், கால்களும் பலம் பெறும். இப்பயிற்சியால், குதி கால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிக்கு இது மிகச் சிறந்த நிவாரணி. கண் பார்வை மற்றும் செவித் திறன் அதிகரிக்கும். உடலினுள் செல்லும் பிராண வாயுவால் உடல் சக்தி பெறும். சுவாசம் தொடர்பான கோளாறுகள் உடலில் இருந்து வெளியேறும். மனமும், சுவாசமும் சீரடைவதால் இரத்த ஓட்டமும் சீராக நடைபெறும். குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.
இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தலைவலி, மலச்சிக்கல், மூட்டுவலி, தூக்கமின்மை என எல்லா வியாதிகளும் எந்தவிதமான மருந்து, மாத்திரைக்களுமில்லாமலே முற்றிலும் குணமாகும் என்பது அனுபவப்பூர்வ உண்மை. எட்டு நடைப்பயிற்சி தொடர்ந்து முப்பது நிமிடங்கள் செய்வதால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் எட்டு போன்ற திருப்பத்தில் காலடி எடுத்து வைக்கும் போதும் உடல் சிறிது திருப்பம் அடைகிறது. உடலின் எல்லாப் பகுதிகளும் சமமான அசைவுக்கு உட்படுகின்றன. சாதாரண நடை பயிற்சியால் உண்டாகும் உடல் சோர்வு, இந்த எட்டு நடையில் இருக்காது. எட்டு நடை அரைமணி நேரம் நடந்தால் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்ததுக்கு சமம். நேராக நடந்துவிட்டு வருவதை விட, எட்டு நடையால் கிடைக்கும் பலன்கள் அதிகம்.
வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே (அ) வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது.
'எட்டு' நடைபயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்வதால் மூட்டு வலியும், இரத்த அழுத்தமும், ஒரு மணி நேரம் செய்தால் நீரிழிவு வியாதியில் இருந்தும் விடுபடலாம். மற்ற நடை பயிற்சியை விட நான்கு மடங்கு இது சிறந்தது. இப்பயிற்சியால் மன அழுத்தமும் குறையும். தினமும் எட்டு நடை முறைப்படி செய்தால், நோய் எட்ட நிற்கும் என்று பயிற்சி செய்பவர்கள் கூறுகிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக