புதன், 25 பிப்ரவரி, 2015

எட்டு நடை பயிற்சி

எட்டு நடை பயிற்சி
* * * * * * * * * * * * * * * *
நவீன விஞ்ஞானத்தின் செயற்கை வெளிச்சத்தாலும், உடனடியாக கிடைக்கும் தற்காலிக நிவாரணத்தாலும், அதிகபட்ச விளம்பரத்தாலும் மக்கள் மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்த நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளும் , வாழ்க்கை முறைகளும், வைத்திய முறைகளும் இயற்கையான நிரந்தர வெளிச்சத்திற்கு வரத்தொடங்கி இருக்கிறது.
ஆங்கில மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டு வந்த நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் இன்றைக்கு அவர்களாலேயே ஒவ்வொன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்கவிளைவுகளை அவர்களே இப்போது ஒத்துக் கொள்கிறார்கள்.
பல்வேறுபட்ட சொந்த அனுபவங்களாலும், கேள்வி ஞானத்தாலும் அதனை உணரத்தொடங்கிய மக்களும், அந்த செயற்கை வெளிச்ச மாயையில் இருந்து மீண்டு, பக்கவிளைவுகளை தரும் உடனடி நிவாரணத்தை விட, "கொஞ்சம் கால அவகாசம் எடுத்தாலும் பரவாயில்லை" என்று ஆரோக்கியத்தை மீட்டுத்தரும் இயற்கை-பாரம்பரிய வைத்திய முறைகளை நாடத்தொடங்கி இருக்கிறார்கள்.
ஆங்கில மருத்துவ முறையை விட்டு வெளியேறும் நோயாளிகள் எத்தனை பேர் என்பதை இன்று வரை சரியான முறையில் கருத்துக் கணிப்பு நடத்தப்படவில்லை என்றாலும் அக்கம் பக்கம் பார்க்கும் பொழுது அந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாமே கண் கூடாக உணரலாம். இருந்தாலும், "ட்ரக் மாஃபியா" என்று சொல்லப்படுகின்ற மருத்துவ/மருந்து வியாபாரிகளின் தந்திரத்தால் நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைக்கு சரியான முறையில் அங்கீகாரம் கிடைக்க வில்லை என்பது வருந்தக்கூடிய நிகழ்வு.
இருநூறு ஆண்டுகள் கூட நிறைவடையாத ஆங்கில மருத்துவம், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இயற்கை வைத்திய முறைகளை, "மாற்று மருத்துவம்" என்று சொல்வது நகைச்சுவையான விஷயம். நியாயமாய் பார்த்தால் நம் பாரம்பரிய வைத்தியத்திற்கு மாற்றாகத்தான் ஆங்கில மருத்துவம் வந்தது. இந்த உலகத்தின் நகர்வை பணம் தான் தீர்மானிக்கிறது.பணத்தால், இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை "இல்லை" என்று சாதிக்கவும் முடிவதால் , நம் பாரம்பரிய வைத்திய/உணவு /வாழ்க்கை முறைகள் எல்லாம் "மாற்று மருத்துவம், மாற்று வாழ்க்கை முறை" என்ற அடை மொழியை சுமக்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.
இவையெல்லாம் நமது ஆதங்கம். நமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளால் எப்படி ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இப்போது "எட்டு நடை பயிற்சி" பற்றியும், அதன் செயல்முறை, பலன்கள் பற்றியும் ஒரு சிறு பதிவு .
இந்த எட்டுநடை கொரியா, தைவான், ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி முறையாக கற்றுகொடுக்கிறார்கள். நம்ம நாட்டிலும் ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திடறேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய் வந்திறேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தவறான புரிதல் என்றே தோன்றுகிறது.
வீட்டிலேயே காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும் இடமாக தேர்வு செய்து ஆறு அடி விட்டமுள்ள இரு வட்டங்களை ஒன்றை ஒன்று தொட்டிருக்கும் படியாக எட்டு (8) வடிவில் தரையில் வரைந்து கொள்ள வேண்டும். அந்த பாதையில் கூழங்கற்களை பதித்தால் பலன் இன்னும் அதிகம். அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த நடைபயிற்சி அமைந்திருக்கிறது.
பாதையில் செய்யும் நடை பயிற்சியில் கவனச் சிதறல் இருக்கும். மற்றவர்கள் மீதும் வாகனங்கள் மீதும் கவனம் போகும். நம்மோடு பாதையில் நடை பயிற்சி செய்பவர்கள் இருந்தால் அவர்களோடு பேசுவது டீ, காபி குடிப்பது என்று பல இடையூறுகள் வரும். ஆனால் இந்த எட்டு வடிவ நடை பயிற்சியில் அவ்வாறான கவன சிதறல்கள் இடையூறுகள் இருக்காது.
எட்டுநடையால் ஏற்படும் பலன்கள்
தினசரி இந்த பயிற்சி செய்வதால் அதிக தொல்லை தரும் வியாதிகள் நம் உடலை விட்டு வெளியேறும். பாதங்களும், கால்களும் பலம் பெறும். இப்பயிற்சியால், குதி கால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிக்கு இது மிகச் சிறந்த நிவாரணி. கண் பார்வை மற்றும் செவித் திறன் அதிகரிக்கும். உடலினுள் செல்லும் பிராண வாயுவால் உடல் சக்தி பெறும். சுவாசம் தொடர்பான கோளாறுகள் உடலில் இருந்து வெளியேறும். மனமும், சுவாசமும் சீரடைவதால் இரத்த ஓட்டமும் சீராக நடைபெறும். குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.
இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தலைவலி, மலச்சிக்கல், மூட்டுவலி, தூக்கமின்மை என எல்லா வியாதிகளும் எந்தவிதமான மருந்து, மாத்திரைக்களுமில்லாமலே முற்றிலும் குணமாகும் என்பது அனுபவப்பூர்வ உண்மை. எட்டு நடைப்பயிற்சி தொடர்ந்து முப்பது நிமிடங்கள் செய்வதால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் எட்டு போன்ற திருப்பத்தில் காலடி எடுத்து வைக்கும் போதும் உடல் சிறிது திருப்பம் அடைகிறது. உடலின் எல்லாப் பகுதிகளும் சமமான அசைவுக்கு உட்படுகின்றன. சாதாரண நடை பயிற்சியால் உண்டாகும் உடல் சோர்வு, இந்த எட்டு நடையில் இருக்காது. எட்டு நடை அரைமணி நேரம் நடந்தால் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்ததுக்கு சமம். நேராக நடந்துவிட்டு வருவதை விட, எட்டு நடையால் கிடைக்கும் பலன்கள் அதிகம்.
வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே (அ) வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது.
'எட்டு' நடைபயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்வதால் மூட்டு வலியும், இரத்த அழுத்தமும், ஒரு மணி நேரம் செய்தால் நீரிழிவு வியாதியில் இருந்தும் விடுபடலாம். மற்ற நடை பயிற்சியை விட நான்கு மடங்கு இது சிறந்தது. இப்பயிற்சியால் மன அழுத்தமும் குறையும். தினமும் எட்டு நடை முறைப்படி செய்தால், நோய் எட்ட நிற்கும் என்று பயிற்சி செய்பவர்கள் கூறுகிறார்கள். 

வியாழன், 12 பிப்ரவரி, 2015

கோபம்!!!!

கோபம்!!!!
* * * * * * * *
கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது. அமைதியான, மன்னிக்கக்கூடிய, சம நோக்குடைய, நிலைகுலையாத மனமுடையவனே அதிக அளவு செயல்பட முடியும்.
-சுவாமி விவேகானந்தர்
சாந்தம், அன்பு என்பவை மனிதனிடமும் உள்ளவை. அதே போல மனிதனுக்கு கோபமும் இயற்கையானது தான். கோபமே வராது, கோபமே வரக்கூடாது என்று எல்லாம் வரையறுக்க முடியாது. அதிகக் கோபதிலிருந்து வெளி வர, கோபத்தைக் குறைக்க, அறவே அழிக்க அதற்குரிய முயற்சியை மேற்கொண்டால் நிச்சயம் பலன் உண்டு. ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாக இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதையே பெறுகிறீர்கள் என்று ஈர்ப்பு விதி கூறுவதை நினைவில் கொள்ளுங்கள்.
கோபதிற்கு மூல காரணம் அறியாமை, இயலாமை, அதிகாரம், தாழ்வு மனப்பான்மை, வறுமை, கண்மூடித்தனம், திறமையின்மை, தனக்கு எல்லாம் தெரியும் என்கிற அகங்காரம், ஆணவம், கர்வமும் தான்.
எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ, அவன் தன்னுடைய பெரிய எதிரியை வெற்றிகொண்டவன் ஆகிறான்.
-லத்தீன்
ஒருவர் நம்மை திட்டினால் அவரை விட மோசமாக திட்டி பழி வாங்கும் வரை நம் மனம் ஓயாது. மோசமான வார்த்தைகளால் திட்டி விட்டோம் என்று சந்தோஷப்படுபவருக்கு ஒரு குட்டித் தகவல் உடலளவில் பாதிப்பு உண்டாவது அதிக கோபப்பட்டவருக்கு மட்டும் தான்.
கோபம் கொள்வதால் உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள், பாதிப்புகள் உண்டாகும் என்பதை இனி பார்க்கலாம்.
கோபத்தால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. மூளையில் உள்ள இயக்க கட்டுப்பாட்டு மையங்கள் வேகம் அடைவதால், உடல் உறுப்புகள் வேகமாக இயங்குவதோடு உடலில் உள்ள சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பு நீர்களை சுரக்கும். வியர்வை சுரப்பிகள் வேகமாக செயல்பட்டு உடல் முழுவதும் வியர்க்கிறது. தசைகள் விரைக்கும். முகம் இறுகும். இதயம் வேகமாக துடிக்கும். தசைகளில் எரிதல் நடப்பதால் கல்லீரலிலிருந்து அதிகப்படியான சர்க்கரை செலவாகும். உடலின் சூடு இயல்பு நிலை விட அதிக சூடாகும். உடலில் இரத்த நாளங்கள் சூடாவதால், நரம்பு மண்டலத்தின் வேகம் அதிகமாகிறது. இதனால் மூளையில் உள்ள உணர்ச்சி நரம்புகள் தூண்டப்பட்டு கோபம் அதிகமாகும்.
பேச்சு சப்தம் கூடிக்கொண்டே போய் உச்சஸ்தாயில் முடிவடையும். இப்படியே தொடரும் கோபத்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும். பேச்சு பாதித்து வாய் குளறும். தொண்டை வறட்சி உண்டாகும். அதிகப்பட்ச கோபத்தில் கை, கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். மனம் செயலாற்றும் தன்மையை இழக்கும். மறதி உண்டாகும். அதிகப்படியான சோர்வு, அசதி, பலவீனம், தூக்கமின்மை, பசியின்மை, அஜீரணம், மலசிக்கல், தலைவலி, மயக்கம் உண்டாகும்.
உடல் அடிக்கடி அதிக சூடானால் இதய நோய், சிறுமூளை, பெருமூளை பாதிப்பு, பித்த தொடர்பான நோய்கள் உண்டாகும். முகத்தில் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதிக இரத்தம் பாய்வதால் கண்களும், முகமும் சிவந்து விடும். தொடர் கோபத்தால் முகம் விகாரமாய் தோன்றுவதோடு, இள வயதிலேயே முதுமை தோற்றமும் உண்டாகும். இதோடு சர்க்கரை வியாதி, இரத்தக்கொதிப்பு என மிகப் பெரிய பரிசை நமக்கு இலவசமாக வாரி வழங்கும் வள்ளல் தான் இந்த கோபம்.
கோபம் தலைதூக்கும்போது, அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள். அமைதியாக இருந்தால் கோபம் நம்மை அசைக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட. அமைதி உள்ளுணர்வுக்கு வலிமை அளிக்கிறது. வலிமை பெற்ற உள்ளுணர்வால் கோபத்திலிருந்து விலக, விலக்க முடியும். வெறுப்பை கைவிட்டு, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை ஆராய்ந்தால் போதுமானதே!
உடல் நலத்தை மனதில் கொண்டு நோயின்றி வாழ விருப்பமா? இனி கோபம் வரும் போது முதலில் தண்ணீர் குடியுங்கள். கோபமூட்டும் சூழலை விட்டு அகலுங்கள். குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள். திறந்த வெளிக்கு சிறிது நேரம் செல்லுங்கள். மனதிற்கு பிடித்த பாடல்களை கேளுங்கள். மனம் அமைதியாகும் வரை 1லிருந்து 100 வரை எண்ணுங்கள். இதுவே கோபம் போக்க மிகச் சிறந்த எளிய வழிகள்.
எல்லாம் இழந்து விட்டு காலம் கடந்து யோசிப்பதை விட, கோபம் எனும் அரக்கனை வேரோடு வீசி எறியுங்கள்.
கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவன் தான் உண்மையான பலசாலி. இனி நாம் யாவரும் பலசாலிகள் தானே!!!