புதன், 18 டிசம்பர், 2013

தூக்கமின்மை (Insomnia)

தூக்கமின்னமையும், மலச்சிக்கலுமே ஒரு மனிதனின் அனைத்து வியாதிகளுக்கும் காரணம். தூக்கமின்மையே வாழ்க்கையின் மிகப்பெரிய அவலமாக மாறி விடுகிறது. குழந்தைகள் குறைந்தது ஒன்பது மணிநேரம் இரவில் தூங்க வேண்டும். பெரியவர்கள் குறைந்தது ஆறிலிருந்து ஏழு மணி நேரம் அவசியம் தூங்க வேண்டும்.

பிறந்த குழந்தை எப்போதுமே தூங்கிக்கொண்டிருக்கும்.. வளர வளர அதன் தூக்கத்தின் அளவு குறைந்துகொண்டே வருவதை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம்... எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் உடலும் மனமும் அமைதியாக இருக்கும்போது நன்கு தூக்கம் வரும்... கவலைகள் மனதில் குடிகொள்ள குடிகொள்ள தூக்கத்தின் அளவு குறையும்... தூக்கத்தின் அளவு குறைய குறைய உடல் ஆரோக்கியமும் குறையும்.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான செயல் இயல்பான நிம்மதியான நல்ல தூக்கம் மட்டுமே. படுத்ததும் தூங்குவது என்பது வரம் போன்றது. ஆனால் நவீன வாழ்க்கை முறையில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வரம் வாய்க்கிறது. உடல் உழைப்பின்மை, ஸ்ட்ரெஸ் (மன உளைச்சல்) பொருளாதார நெருக்கடி என்ற பல காரணங்களால் பலர் தூக்கம் இழந்த நிலையில் பல வியாதிகளோடு போராடிக் கொண்டு தான் இன்றும் இருக்கிறார்கள். தூக்கம் இழந்த ஒரு மனிதனின் கடைசி நிலை மனநிலை பாதிப்பு தான்.

தூக்கம் இல்லாதவர்களின் மனம், உடல் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும். தூக்கம் மிகவும் உடலிற்கு மிக அத்தியாவசியமான ஒன்று என்று எத்தனை ஆய்வுகள் கூறினாலும் எல்லாம் தெரிந்தது போல, தாங்களும் தூங்காமல் அடுத்தவர்கள் தூங்குவதை கேலி செய்ய ஒரு கூட்டம் உண்டு.

தூக்கமின்மைக்கு பல்வேறு காரணங்களால் கூறப்பட்டாலும் உடல் நலமின்மை, மன அழுத்தம், எரிச்சல், கோபம், இயலாமை, ஆத்திரம், என அடுக்கி கொண்டே போகலாம். தெளிவற்ற மனநிலை எப்போதும் தவறன முடிவுகளையே எடுக்க வைக்கும். நிம்மதியாய் தூங்கினாலே போதும்.. உடலில் பல நோய்கள் வராமலும், மன அமைதியுடன் நிதானமான - தெளிவான முடிவெடுத்தலின் மூலம் குடும்பத்தில் பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

பார்கின்ஸன், அல்சீமர், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தூக்கம் இல்லாமல் இருப்பவர்களையே தாக்கும் மிக முக்கிய வியாதிகள். தற்கொலைக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று தூக்கமின்மை . ஆழ்ந்த தூக்கம் நிறைய வியாதிகளில் இருந்து நம்மை மீட்டு கொண்டு வரும்.

நிம்மதியான தூக்கத்திற்கு
- - - - - - - - - - - - - - - - - - - - -

1. பகல் தூக்கம் தூங்குபவர்களுக்கு இரவு தூக்கம் கண்டிப்பாக தாமதம் ஆகும். மதிய உணவிற்கு பின் உறங்கும் பழக்கம் நிறைய பேரின் வாழ்க்கையில் பல வியாதிகளை அவர்களுக்கு அன்பளிப்பாக தரும் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம்.

2.தூங்கும் போது அறையை வெளிச்சம் இல்லாமல் இருட்டாக வைத்திருப்பது. (அ) கண்கள் மேல் வெளிச்சம் படாமல் பார்த்துகொள்வது மிக அவசியம். வெளிச்சம் நம் நரம்பு மண்டலம், மூளையை தூண்டி தூக்கத்தை தடை செய்யும். தூங்குவதற்கு முன்னால் டிவி, கம்ப்யூட்டர், மொபைல், என வெளிச்சம் அதிகம் உள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது. மேலும், அதன் ஒளித்திரையை அணைக்காமல் படுத்தால் தீடீரென்று விழித்து பார்க்கும் போது அந்த வெளிச்ச திரைகள் கண்ணில் பட்டு மீண்டும் தூக்கம் வர சிரமமாகும்.

3. தூக்கத்தில் இருந்து விழித்தால் அதிக பசி இருந்தால் மட்டுமே உண்ண வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஏதாவது உணவு பொருட்களை உட்கொண்டால் திரும்பவும் தூக்கம் தொலைக்க வேண்டி இருக்கும்.

4. நல்ல தூக்கத்திலோ (அ) தூக்கம் வரமால் இருந்தாலோ நீங்கள் உங்கள் கவலை, துக்கம் எதுவாக இருந்தாலும் பக்கத்தில் ஒரு பேப்பர் வைத்துக் கொண்டு அதில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் அந்த கவலைகளை வெளியே சொல்லிவிட்ட ஒரு மன திருப்தி உங்களுக்குள்ளே உண்டாகும். நல்ல தூக்கமும் வரும்.

5. ஒவ்வொரு உறுப்பையும் மனம் உள்பட இறுக்கமாக வைக்காமல் லேசாக தளர்த்தி கண்மூடி இருக்க முயன்றாலே மனமும், உடலும் அமைதியாகி தூக்கம் கண்களை மூடிக்கொள்ளும்.

6. மிக முக்கியம் மாலை நேர அமைதியான நீண்ட நடைப் பயிற்சி. இது உடலுக்கு மிகவும் நல்லது. அதிக தூரம் நடப்பதால் உடல் அதற்கு தேவையான ஓய்வை தூக்கம் மூலம் அதுவே எடுத்துக் கொள்ளும்.

7. தூங்குவதற்கு முன் அதிக கொழுப்புள்ள உணவு வகைகள், மது, சிகரெட் போன்றவற்றை தவிர்க்கவும்.

தூக்கம் வராமல் வேதனைப்படுபவர்கள் மேல கூறி இருப்பதை பின்பற்றி வந்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம். மனதை லேசாகவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் தூக்கம் நம்மோடு இருக்கும்..அதை தொலைத்து விட்டு தேட வேண்டிய அவசியம் இல்லை.

எந்த மருந்துகளும் இல்லாமல் உடல் அதற்கு தேவையான அனைத்து சக்திகளையும் அதனுள்ளே இருந்து பெற்றுக் கொள்ளும் அற்புத ஆற்றல் பெற்றது. உடலின் மொழி புரிந்து கொண்டு அதை நாம் வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும். பஞ்சபூதங்கள், இயற்கை, உடல் எப்போதும் நம்மை ஒரு போதும் ஏமாற்றாது என்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக