வியாழன், 28 ஆகஸ்ட், 2014

"மனம் போல் வாழ்வு"


"தீர்மானிக்கும் மனதின் இரகசியம் கற்பனையில்தான் 
முழுக்க முழுக்க புதைந்து கிடக்கிறது" -கிறிஸ்டியன் டி லார்சன் 


நம் முன்னோர்கள் சொன்னதும், வெளிநாட்டு அறிஞர் பெருமக்கள் சொன்னதும் ஒரே விஷயம் தான்... நம்முடைய ஒட்டு மொத்த வாழ்வும் நாம் என்னவாக ஆக போகிறோம் என்பதுவும் நாம் செய்து வைத்து இருக்கும் கற்பனையை பொறுத்தே அமையும்.
முடிந்த அளவு சிறப்பான, மேன்மையான விஷயங்களை தொடர்ந்து நாம் செய்யும் உணர்வுப்பூர்வமான கற்பனைகளே, நிஜத்திலும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வினைகளாக அமையும்.

"முடியாது" என்ற காரியங்களை தன் கற்பனை வளத்தால் முடியும் என்று கற்பனை செய்தவர்கள் தான் மனித குலத்தின் குறைபாடுகளை உடைத்த செயல்வீர்ர்களாக திகழ்கிறார்கள். எந்த துறையாக இருந்தாலும் கற்பனையும் அதை தொடர்ந்த முயற்சியும் மட்டுமே தான் அவர்கள் துறையில் அவர்களை வெற்றி பெற வைத்ததோடு இல்லாமல் வரலாற்றில் இடம் பிடித்தவர்களாகவும் ஆக்குகிறது . பல புதிய கண்டுபிடிப்புகள் , கண்டுபிடித்தவரின் கற்பனையே சரித்தரமாக மாற்றியும் இருக்கிறது.

"கற்பனை தான் படைப்பின் துவக்கம், நீங்கள் ஆழமாக
விரும்புவதைக் கற்பனை செய்யுங்கள். நீங்கள் கற்பனை
செய்யும் விஷயத்தில் மன உறுதி கொள்ளுங்கள்., இறுதியில்,
நீங்கள் மன உறுதியுடன் இருக்கும் விஷத்தை நீங்கள்
உருவாக்குவீர்கள்". - ஜார்ஜ் பெர்னார்டு ஷா, நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர்





நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதையே பெறுகிறீர்கள் என்று ஈர்ப்பு விதி கூறுவதை நினைவில் கொள்ளுங்கள். ஈர்ப்புவிதியை ஒரு கண்ணாடி, எதிரொலி, ஜெராக்ஸ் மெஷின் மற்றும் பூமராங்காகவோ நினைக்கும் பட்சத்தில் நம்முடைய மனக்கண்ணில் எண்ணும் எண்ணங்களே திரும்ப கிடைக்கும் என்ற தெளிவை பெற உதவும். கண்ணாடி எப்படி நம்மை அப்படியே துல்லியமாக பிரதிபலிக்குமோ, எதிரொலி என்பது எதை நாம் வெளிபடுத்துகிறோமோ, மிகச் சரியாக அதே எதிரொலி தான் நம்மிடம் திரும்ப கிடைக்கச் செய்யுமோ அதுவே ஈர்ப்பு விதி ஆகும். மேலும் இந்த ஈர்ப்பு விதி பூமராங் போலவே நாம் எதை வெளியே எறிகிறோமோ அதுவ நம்மிடம் திரும்ப வருவது போலத்தான். ஜெராக்ஸ் மெஷின் போல நாம் வைப்பதை பிரதி எடுத்து கொடுக்கும் ஆற்றல் பெற்றது தான் ஈர்ப்பு விதி என்பதும்.

"இவ்வுலகம் நம் கற்பனைகளுக்கான ஓவியத் திரை" - ஹென்றி டேவிட் தோரோ, ஆழ்நிலைவாத எழுத்தாளர்.

எந்தவொரு நேர்மறையான விஷயத்தையும் அன்பாக செய்கிறோமோ அதுவே நம்முள் நிலைக்கும் சக்தியாக உருமாறும். அதை தான் நாம் தீவிரமாக பெறுவோம். எந்த ஒரு எதிர்மறையான விஷயமோ, செயலோ வெறுமனே கற்பனை செய்யப்பட்டாலும் கூட அதை அனுப்பியவரிடமே அதே வேகம், உக்கிரத்துடன் திரும்பி வரும் எனபதும் உறுதி. நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள்.

போராடிக் கொண்டிருக்கும் மக்கள் தங்களுக்கும் தெரியாமல் எப்போதும் அவர்களுக்கு பிடிக்காதவற்றை, நேசிக்காதவற்றை, விருப்பமில்லாதவற்றை பற்றியே நினைப்பதும் , கற்பனை பண்ணுவதுமாகி விடுவார்கள். எதிர்மறையான கருத்துக்கள் நம்முள் பரவி நம்மை நல்லெண்ணங்களுடன் இணைய விடாமல் செய்யும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுவோம். ஒரு நல்ல ஓவியனாக வேண்டும் என்றோ, கவிஞனாக வேண்டும் என்றோதான் கற்பனை செய்யவேண்டும் என்பது இல்லை.. எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் உங்களால் முடிந்தவரை அது நல்லவைகளாக இருக்கட்டும்...

உங்கள் தாய் தந்தை உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைத்தீர்களோ.. அப்படியே உங்கள் மகன்/மகள்களை நடத்துங்கள்... மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ.. அதேபோல நீங்கள் மற்றவர்களிடம் நடந்துகொள்ளுங்கள்...

எண்ணிய முடித்தல் வேண்டும்..
நல்லாவே எண்ணல் வேண்டும்...
திண்ணிய நெஞ்சம் வேண்டும்..
தெளிந்த நல்லறிவு வேண்டும்..
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியை போலே..
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அன்னாய் என்று மகாகவி பாரதியாரும்..

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்." என்று வள்ளுவரும் நமக்கருளிச்சென்ற நற்கருத்துக்கள் இதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக