புதன், 14 ஜனவரி, 2015

உணவு - உடல் - உயிர்

உணவு - உடல் - உயிர் 
* * * * * * * * * * * * * * * * * * *
உலகில் பட்டினிச்சாவு எந்த அளவிற்கு நிகழ்கிறதோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதிக உணவாலும் மரணம் ஏற்படுகிறது. "இறப்பதற்கென்றே உண்ணுகிறார்கள்" என்ற ஆங்கிலேயப் பழமொழிக்கேற்ப பல பேர் விருப்பம் போல் உண்டு இறந்தும் விடுகிறார்கள்.

ஒரு வியாதி வர மூல காரணம் எதுவாக இருந்தாலும், மிக முக்கிய காரணம் முறையற்ற, கேடான உணவுப் பழக்கமே அனைத்து வியாதிகளுக்கும், வியாதியை வளர்க்கும் காரணிகளாக அமைந்துவிடும்.

உடல் அழிவதற்கான காரணங்களை ஐந்து பங்காக பிரித்தால், அதில் ஒரு பங்கு காரணம் பயம், தூக்கமின்மை, தீய பழக்கங்கள்- எண்ணங்கள். மீதமுள்ள நான்கு பங்கு காரணம் உணவு மட்டுமே என்கிறார் வள்ளலார்.

அவரவர் உடல்நிலைக்கு ஏற்பவும், தேவைக்கேற்பவும் உண்ணுதல் வேண்டும். உணவின் அளவு கூடினாலும், குறைந்தாலும் உடலில் நோய் ஏற்படும்.

ருசிக்காகச் சாப்பிடக் கூடாத பொருள்களை அளவில்லாமல் உண்பதும், பசிக்காக அளவுக்கு மீறிச் உண்பதும் தான் பிணிகளுக்கு காரணம். "நொறுங்கத் தின்றால் நூறுவயது" என்ற நம் முன்னோர்கள் கூற்றுக்கு ஏற்ப, உணவை வாயிலையே நன்றாக மென்று கூழாக்கி தான் விழுங்க வேண்டும். நாம் உண்ட உணவு செரிமானமாவதற்கு நான்கு மணி நேரம் ஆகிறது.

சில நேரங்களின் பரிமாறுபவரின் அன்பின் காரணமாகவோ- சாப்பிடுபவரின் ஆசையின் காரணமாகவோ அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இப்படி அளவுக்கதிகமாகச் சாப்பிடும் உணவு செரிக்க குறைந்தது ஏழு முதல் எட்டுமணி நேரம் ஆகும் என வாஷிங்டன் சானிடோரியத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கூறப்பட்டுள்ளது.. இதனால் கல்லீரல், பித்தப்பை போன்ற ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப்புண் போன்றவற்றால் பாதிக்கப்படும் என்றும் கூறி உள்ளனர்

பலர் காலையில் ஒன்பது மணிக்கு காலை சிற்றுண்டியை சாப்பிட்டாலும், மதியம் ஒரு மணி ஆகிவிட்டால் மதிய சாப்பாட்டிற்கு தயாராகி விடுவார்கள். இவர்கள் பசிக்காக சாப்பிடுவது இல்லை. நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்ற மனநிலையில் பசிக்காமலே சாப்பிடுபவர்கள். இப்படி செரிமானமாவதற்கு முன்பே சாப்பிடும் உணவால் எளிதில் ஜீரணமாகாமலும், செரிமான மண்டலம் தொடர்ந்து உழைக்க வேண்டிய கட்டாயமும் உண்டாகிறது. மேலும் செரிமான மண்டலம் வெகுவிரைவில் தன்னிலை இழப்பதோடு, கட்டாய ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவதால் மற்ற உறுப்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழக்க ஆரம்பிக்கும்.

மேலும் நம்மவர்கள் உடல் உழைப்புமின்றி, அதிகம் விரும்பி உண்ணும் இறைச்சி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ள தேவையான கொழுப்பு மட்டுமே உடல் எடுத்துக் கொள்கின்றது. மற்ற தேவையற்ற கொழுப்பு இரத்தத்திலும், உடலில் ஆங்காங்கேயும் தங்கிவிடுகின்றது. கொழுப்பு இரத்தத்தில் கலந்து அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி இரத்தக் குழாயில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படச் செய்கின்றது. கொழுப்பு உணவு, போர்வாளைக் காட்டிலும் அதிகம் பேர்களை கொன்று விடும் என்கிறது மருத்துவ ஆராய்ச்சி.

உலக மக்கள் அனைவருமே தங்களது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள அவரவர்க்குத் தகுந்தவாறு பல்வேறு வகையான மருந்துகளோ, பஸ்பங்களோ, காயகல்பங்களோ உட்கொள்கின்றனர். இதையெல்லாம் தேடி அலைவது வீணானான செயலாகும். வாழும் காலம் ஆரோக்கியத்துக்கு. முறையான உணவு பழக்கங்கள், பசி அறிந்து அளவோடு உண்ணுதல், எளிய உடற்பயிற்சி,, தியானம் என்று வாழ்ந்தாலே போதும். வேறு ஒன்றுமே தேவையில்லை.

நமது அன்றாட உணவு என்பது நம் அனைவரின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், பாதுகாக்கவும் இயற்கை உணவை பழக்கப்படுத்திக் கொண்டால் நீண்ட ஆயுளையும், வளமான வாழ்க்கையையும் பெறலாம். அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக