புதன், 14 ஜனவரி, 2015

இரத்த அழுத்தமும், பக்கவாதமும்!

இரத்த அழுத்தமும், பக்கவாதமும்!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அறியாமை காரணமாகவோ- அலட்சியம் காரணமாகவோ- அதீத நம்பிக்கை காரணமாகவோ நம் உடலில் உண்டாகும் சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுக் கொள்ளாமல் விடுவதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய ஆபத்தாய் மாறி உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இந்தியாவில் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் சாதரணமாக காணப்படுகிறது. இந்த வகையில் மிகவும் ஆபத்தானது உயர் இரத்த அழுத்தம். இரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே சிக்கல் தான். இந்த இரத்த அழுத்தமானது ஒரே நாளில் திடீரென உயர்ந்து விடுவது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.

பொதுவாக பக்கவாதத்துக்கு முன்பே உடலில் சில அறிகுறிகள் தென்படும். தலைவலி, வாந்தி, சுயநினைவை இழத்தல், கை கால் மரத்துப் போதல், பேச்சு குளறுதல், நடுக்கம், தலைசுற்றல், கை கால் வலு இழத்தல் போன்ற பிரச்னைகள் வரும்போதே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இது தொடங்கும் வேளையில் லேசான நெஞ்சு எரிச்சல், அசிடிட்டி, தலை வலி என சிற்சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஆனால் நெஞ்செரிச்சல் - அசிடிட்டி இருப்பதை உணர்ந்தால் ஈனோ - (அ) ஜெலூசில் குடி என்றும், தலை வலியா ஒரே ஒரு சாரிடான். நாமே இன்ஸ்டன்ட் மருத்துவர்களாய் மாறி பக்கத்து மெடிக்கல் ஷாப்பில் மருந்து- மாத்திரைகளை வாங்கி நமது அந்த பெரிய நோயை (???) தீர்த்துக்கொள்வோம். நமக்கு முன்னெச்சரிக்கையாக உடல் அறிவுறித்திய அந்த அறிகுறியை பூசி மறைத்து, உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்.
இன்ஸ்டன்ட் மருத்துவரான நம் உடலில் இரத்த அழுத்தம் இன்ஸ்டால்மென்ட் முறையில் வளர்ந்து பிறகு பெரிய பிரச்சினையாய் உருவெடுக்கும்.

எப்போதும் பரபரப்பாக மன அமைதியின்றி இருத்தல், சரியான நேரத்துக்கு தூங்காமல் இருத்தல், தொடர் மன அழுத்தம், எதற்கெடுத்தாலும் கோபப்படுதல், எரிச்சலடைதல்... நமது பொறுப்பை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று உடலையும்- மனதையும் அலட்டிக்கொள்ளுதல் போன்றவை தான் இரத்த அழுத்தம் வர காரணம். இதோடு, நாம் எப்போதும் சொல்வது போல நவீன உணவு முறைகள், இவைகளும் முக்கிய காரணம். இரத்த அழுத்தத்தின் அடுத்த கட்டம் மரணம் (அ) பக்க வாதம். உணவில் அதிகளவு கெட்ட கொழுப்பை அதிகம் எடுத்துக் கொள்ளுதல், எப்போதும் டென்ஷனாக இருத்தல், நீண்டகால ரத்த சோகை போன்ற பிரச்னை உள்ளவர்களை பக்கவாதம் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.

முன்பெல்லாம் பெரும்பாலும் நடுத்தர வயதினரைத் தான் பக்க வாதம் தாக்கும். இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் பக்க வாதம் தாக்குகிறது. உலகம் முழுவதும் ஆறு வினாடிக்கு ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

இரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் நாற்பது வயதுக்கு மேல்தான் வரும் என்று நம்பி இருந்த காலம் போய் இப்போது பதினெட்டு வயதிலேயே தாக்க ஆரம்பித்து விட்டது. நடுத்தர வயதினரின் உடலில் ஏற்படும் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இந்த இரண்டும் தான் வாதம் உண்டாக மிக முக்கிய காரணம். மேலும் நாள்பட்ட நோய்களான இதய நோய், சிறுநீரகப் பழுது, அறுவை சிகிச்சையில் ஏற்படும் சிக்கல்கள், இரத்தக் குழாய் அடைப்பு மற்றும் இரத்தக் கட்டிகள் ஆகியவற்றாலும் வாத நோய் வரலாம்.

உடல் பருமன், அதிகக் கொழுப்பு, போன்ற பிரச்னை உள்ளவர்களையும் வாதம் எளிதில் தாக்கும். சாதாரண விஷயம் போல நாம் நினைத்துக் கொண்டாலும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகளும் பாதிக்கப்படும்.

சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கும், சிறுநீரங்ககளில் பிரச்சினை உள்ளவர்களுக்கும் இரத்தக்குழாய் தடிமனாக இருக்கும். இவர்களது உடலில் இரத்த ஓட்டம் குறையும். இதனால் வலியை உணரவும் முடியாமல், பக்கவாதத்துக்கான அறிகுறிகள் இருந்தாலும் தெரியமால் பக்க வாதம் திடீரென தாக்க வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. கொழுப்பு கட்டிகள், இரத்த ஓட்டத்தை தடுப்பதாலும் வாதநோய் தாக்கும். வாதத்தின் அடுத்த கட்டமாக உடல் செயலிழத்தல், நினைவிழத்தல் போன்ற பிரச்னைகளை தடுக்கலாம்.

மூளையிலும், தண்டு வடத்திலும் நரம்புகள் ஆரம்பித்து தசைகளை இயக்குகின்றன. மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் இரத்தம் உறைந்தாலோ இரத்தக் குழாய் வெடித்தாலோ மூளையில் பாதிப்பு ஏற்படும். மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்கள் வெடித்தால் மரணம் உண்டாகும். மேலும் மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய் சுருங்கினால், மூளைக்கு செல்லும் இரத்தம் அளவு குறைவதால் பக்கவாதத்தில் தான் போய் முடியும். மேலும் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளைக்கு செல்லும் சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால், மூளைப் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்புகளில் பாதிப்பும், மூளையில் இரத்தக் கசிவும் ஏற்பட்டு வாத நோய் உண்டாகும். மூளையில் உண்டாகும் பாதிப்புக்கு ஏற்ப அப்போது மூளையின் எந்த பகுதிக்கு இரத்த ஓட்டம் செல்வது குறைகிறதோ அதன்படி முகம், கை, கால் அல்லது முழு பக்கவாத பாதிப்பு உண்டாகும். உடனடியாக கவனிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி செயல் இழந்து போகும். இத்துடன் தலையில் அடிபடும் போது மூளை பாதிப்பின் காரணமாக வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்த நோய் உண்டாவதோடு, சிறுநீரகங்கள் கெட்டுப் போகும் வாய்ப்பும் அதிகம். தவறான உணவு முறைகள், உடல் உழைப்பு இல்லாமல் அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, அடிக்கடி குளிர்பானங்களை குடிப்பதால் இரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, புகை, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை என இது போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் உண்டாகி விடுகின்றன.

புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது இரத்தக் குழாயை சுருங்க செய்வதால் சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டமும் தடை படும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும், புகைபிடிக்கும் பழக்கத்தையும் விட வேண்டும். சரியான நேரத்துக்கு தூங்குவது, முறையான உணவு முறைகள், கொழுப்பு உணவுகளை தவிர்த்தல் போன்றவை அவசியம்.

உணவு முறை, வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் பெரிய அளவிலான உடல் பாதிப்புகளை தடுக்க முடியும். நீரழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையை அமைதியானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். பக்கவாதம் வந்த பின் பழைய நிலைக்கு திரும்புவது சாதாரண விஷயம் இல்லை. இதிலிருந்து காத்துக் கொள்வது எப்படி என இனி காணலாம். உணவு முறைகள், எளிய உடற்பயிற்சிகள், அக்குபஞ்சர் இவற்றின் மூலம் உடலில் உண்டான இந்த கோளாறுகளை குணமாக்குவது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக