செவ்வாய், 14 அக்டோபர், 2014

மூலம்

மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையும் உடல் மற்றும் மன உளைச்சல்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நிறையபேர் பாதிக்கப்பட்டு, வெளியில் சொல்ல வெட்கப்பட்டு உயிர் போகும் வலியால் துடிதுடித்தும் போவதுண்டு.

பொதுவாக மூல வியாதியை உள்மூலம், வெளிமூலம் என இரு வகை உண்டு. இதில் பலப் பிரிவுகளும் உண்டு. மலக்குடலின் கடைசி பகுதியில் ஏற்படும் தடிமனான சதை வளர்ச்சி மூலம் எனப்படும். இந்த சதை வளர்ச்சியானது மலம் வெளியேறுவதை தடுக்கும்.. மலத்தை வெளியேற்ற அதிக அழுத்தம் கொடுக்கும் போது சதை திரண்டு இரத்தம் கசிய கசிய ஆசன வாயின் வழியாக வெளித்தள்ளும். அப்படி தடிமனாகி உட்புறமே இருந்தால் அது உள்மூலம் எனவும், சதை வெளித் தள்ளினால் அது வெளி மூலம் எனவும் குறிப்பிடப்படும்.

முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்காமல் போவதும், மலச் சிக்கல் பிரச்னை பெரிய அளவில் தொடர்வதுமே மூல நோய்க்கு முக்கியக் காரணம். கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக கூட வாய்ப்புண்டு.


எத்தை தின்றால் பித்தம் தெளியும்? என்று ஒரு பழமொழி சொல்வார்கள். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதையாவது செய்து அதில் இருந்து மீண்டு விட மாட்டோமா என்று துடிப்பார்கள். பேருந்து நிலைய கழிவறை சுவற்றிலும் வாயில் அருகிலும் ஒட்டப்பட்டிருக்கும் மலிவான தாளில் அச்சிடப்பட்ட மஞ்சள், ரோஸ் நிற "மூலம்-பவுத்திரம்" விளம்பரங்களை கண்டு, அவர்களை நாடி மூல வியாதி உபாதைகளை அதிகமாக்கி பெரும் பண இழப்பையும் சந்தித்தவர்கள் பலர் நம்மிலும் உண்டு. வந்தபின் வைத்தியம் செய்வது வேறு. வருமுன் காப்பது வேறு. வருமுன் காத்து விட்டால் அனுபவிக்கும் வேதனையும், செலவு செய்யும் பணமும் மிச்சம். ஆகவேதான் நம் முன்னோர்கள் "வருமுன் காப்பதே சாலச்சிறந்தது" என்று சொல்லி இருக்கிறார்கள்.

மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் ஏற்பட்டால் உடலில் வாயுத் தொல்லை, இரத்த அழுத்தம், சிறுநீரகக் குறைபாடு, தோல் நோய்கள், (அரிப்பு, சொறி, சிரங்கு)போன்ற வியாதிகள் தோன்றும். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலநோய் பிரச்னையை உருவாக்குகிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். மலம் கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் இரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். மூலநோயானது மனரீதியாகவும் பாதிப்படையச் செய்யும். மனம், உடலில் ஒருவித தளர்ச்சி, அடிக்கடி கோபப்படுதல், எரிச்சல், போன்ற அறிகுறிகள் தென்படும்.

மூல நோய் எப்படி வருகிறது?

மலச்சிக்கல், நார்ச் சத்து குறைவான காரம் அதிகமான உணவுவகைகள், அதிக அசைவ உணவுகளை உட்கொள்ளுதல், ஒவ்வாத உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது, அடிக்கடி ஃபாஸ்ட் புட் மற்றும் மைதா உணவு வகைகளை உட்கொள்வது, தவறான உணவுப் பழக்கம், புகை மற்றும் மதுப் பழக்கம், அதிக உடல் எடை, தைராய்டு, நீரிழிவு நோய், உடலில் அதிக சூடு, நேரம் தவறிய தூக்கம், ஓய்வே இல்லாத கடுமையான உழைப்பு, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது, மலம் வரும்போது அடக்குதல் இப்படி பல காரணங்களால் மூல நோய் வரலாம். குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

மேற்கண்டவற்றை தவிர்த்தாலே மூல நோய் வராமல் தடுக்கலாம்...

சரி.. நமது தவறான வாழ்க்கை முறையினாலோ, அறியாமையினாலோ, தவிர்க்க முடியாமலோ மேற்கண்டவற்றை செய்து அதனால் மூலநோயும் வந்துவிட்டது. இனி என்ன செய்யலாம்?

இரவில் ஆழ்ந்த தூக்கம், உடல் சூடு குறைய வாரம் ஒரு முறை மிதமாக சூடு செய்யப்பட்ட நல்லெண்ணெய் குளியல், சிறுதான்யங்கள், நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் என முறையான வாழ்க்கை முறையும், உணவு முறையும் மூலத்தை கட்டுக்குள் கொண்டு வரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு, பகல் நேரங்களில் கேரட் ஜூஸ் குடிப்பது நல்ல பலனைத் தரும். அகலமான பாத்திரத்தில் சூடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும். தினமும் உணவில் கீரை, பூண்டு, முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம். வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் மசாலா உணவுகள், முட்டை, சிக்கன், மீன் என எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது.

இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.

வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய கூடியவர்கள் பருத்தி துணியிலானான நீள வாக்கில் தடுப்புகள் அமைக்கப்பட்ட ஒரு பை தயாரித்து, அதனுள் வெந்தயம் நிரப்பி, அதன் மீது அமர்ந்து வேலை செய்தால் மூலத்தை கட்டுப்படுத்தலாம். மலச்சிக்கல் வராமல் இருந்தாலே மூல நோயை முற்றிலுமாகத் தவிர்த்துவிடலாம்.





அக்குபஞ்சர் முறையில் மூலம் முழுவதுமாக குணமாகும். எளிமையான முறையில் நோயிலிருந்து விடுபட, இங்கு குறிப்பிட்டிருக்கும் இடங்களில் ஒரு நாளில் இரண்டு (அ) மூன்று முறை 3-5 நிமிடங்கள் வரை அழுத்தம் கொடுத்து வர மலச்சிக்கல், மூலம், செரிமானக் கோளாறுகள், உடல் வலி போன்ற வியாதிகளும் தீரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக