செவ்வாய், 14 அக்டோபர், 2014

மெனோபாஸ்- நாற்பதுகளில் சந்திக்கும் சவால்..!!!

பெண்களின் உடல்நிலையில் பருவ வயதை எட்டியதில் இருந்து நாற்பது வயதுவரை பலவிதமான மாற்றங்கள் நிகழும். இதனால் பல உடல் உபாதைகளை அவர்கள் சந்தித்தாலும் அது பெரிய அளவில் அவர்களுக்கு மன மாற்றத்தை உண்டு பண்ணாது. ஆனால் 40 வயதை கடந்த பின் பெண்கள் உடலளவில் சந்திக்கும் பற்பல மாற்றங்கள் அவர்களின் மன நிலையையும் மாற்றும்.
.
40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. அதிலும் பெண்கள் வாழ்வில் இந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி குறைந்து விடும் அல்லது நின்றுவிடும். அதனால் நாற்பது வயதுக்கு மேல், பெண்ணின் கருப்பையில் செயல்பாடு குறைந்து, மாதவிடாய் முறையற்றதாகி, பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை அடைகிறார்கள். இதற்கு மெனோபாஸ் என்று பெயர். மெனோபாஸ் என்றாலே, தேவையில்லாத பயத்தில் வியாதிகள் வரும் காலம் என்று பலரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த காலக் கட்டத்தில் பெண்கள் அடிக்கடி கூறும் வார்த்தை "மனசே சரியில்லை". வருமானம், பிள்ளைகள் திருமணம், பணப் பிரச்னை, குடும்ப சூழல் என நெருக்கடிகள் நிறைந்த அதிக பொறுப்புகளை சுமக்க நேரிடும் காலக்கட்டம் அது. பலவிதமான நோய்கள் தேடி வரும் காலமும் கூட. கவலைகளுக்கு இடம் கொடுத்து, உடலில் உட்கார வைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும்.

ஈஸ்ட்ரோஜன் பற்றாக்குறையால் தோலுக்கு மினுமினுப்பையும், மிருதுத் தன்மையும் கொடுக்கும் கொலேஜன் என்ற புரதம் சார்ந்த நார்ப் பொருள் குறைந்து விடுவதால், தோலில் வறட்சியும், சுருக்கங்களும் ஏற்படுகின்றன. மாதவிலக்கு நிற்கும்போது, மனதளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்வதும் தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர, தாம்பத்தியத்திற்கானதல்ல.

இந்த காலங்களில், உடல் கொதிப்பு, இரவில் வியர்வை, பிறப்புறுப்பில் வறட்சி, எரிச்சல், அரிப்பு, உடலுறவின் போது வேதனை, சிறுநீரை அடக்கி வைக்க முடியாமை, நினைவாற்றல் குறைதல், கவனக்குறைவு முதலிய குறைபாடுகள் தோன்றுகின்றன. புகையிலை பொருட்களை உபயோகித்தல் , புகைப்பிடித்தல், மது போன்ற பழக்கங்கள் இருந்தால் பாதிப்பு மிக அதிகமாகும். தனக்கு யாருமில்லை, தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என்ற மனநிலையை தாங்களே உண்டாக்கி கொண்டு மன உளைச்சலை வரவைத்துக் கொள்வர். நாற்பதுக்கு மேல் வாழ்க்கை மீதான பயமே மனஅழுத்தமாகி, மன உளைச்சலாகி பல நோய்களை வர காரணமாகி விடும்.

மன அழுத்தத்தால் உடல் எடை, சர்க்கரை நோய் போன்ற வியாதிகள் எட்டிப் பார்க்கும். இவற்றை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளாவிட்டால் இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகும். மெனோபாஸிற்குப் பிறகு பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலே எலும்புகள் உடையும் நிலை உண்டாகும். நாம் கவனமாக இருந்தால் நோயே இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

மனதை எப்படி ஆரோக்கியமாக வைப்பது?
சுற்றுச் சூழல் காரணிகள், பயணம், மன நிலைகள் போன்றவை இளம் வயதினரைவிட வயது முதிர்ச்சியடையும் நிலையில் உள்ள பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். நடைப் பயிற்சி, முறையான யோகா, சரிவிகித உணவு போன்றவை உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும். வயதான காலத்தில் எதற்கு விலை அதிகம் கொடுத்து துணி வாங்க வேண்டும் என்ற அலட்சியம் தலை தூக்கும். எப்போதுமே ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கு ஏற்ப உடுத்துகிற உடையில் கவனம் தேவை. பொருத்தமான அழகான உடை உடுத்தி கௌரவமாக, அழகாக இருந்தால் போகுமிடத்தில் எல்லாம் நமக்கு தனி மரியாதையை நாம் உடுத்தும் ஆடைகளே பெற்றுத் தரும். மேலும் ஒருவரின் உடைகளே அவருக்கு மனவலிமையும், தன்னம்பிக்கையும் உண்டாக்கும் என்பது உளவியல் கருத்து.

அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும். முகத்தை எந்த நேரமும் சிடு, சிடு என்று வைத்துக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் இருந்தால் முகம் பொலிவோடு விளங்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனதை சந்தோஷமாக வைத்து கொண்டால் முக பொலிவு தானாகவே வந்து விடும். காபி, டீ குடிப்பதை தவிர்த்து விட வேண்டும். காற்றோட்டமான இடங்களில் வாழ்வதுடன், இரவில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது.

உடல் எடை கூடினால், தோற்றத்தில் முதுமைத் தெரியும். வீட்டிலேயே செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். உணவு, உடற்பயிற்சி, தெளிந்த மனம் இந்த மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை முறையை மாற்றி மனம், உடல் இரண்டையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டால், எப்போதும் இளமையுடன் ஆரோக்கிய வாழ்வும் வாழலாம். இயல்பாக இருப்பதே சந்தோஷமான தாம்பத்தியத்திற்கான வழிமுறைகள்.

வீட்டில் இருப்பவர்கள் இதற்கு எவ்விதம் உதவலாம்...??
இப்போது உலகின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர்களுடன் சமூக வலைத்தளங்கள், தொலைபேசிகள் மூலமாக தொடர்ந்து தொடர்பில் இருக்கும் யாரும் அக்கம் பக்கம் இருப்பவர்களையோ, ஒரே வீட்டில் உடன் இருப்பவரையோ கண்டுகொள்வதே இல்லை. இது பொதுவாக எல்லோருக்கு நடுவிலும் பெரிய இடைவெளியை என்றாலும், இந்த மெனோபாஸ் காலத்தில் இருக்கும் பெண்களின் மனநிலையை வெகுவாக பாதிக்கும்.

எனவே இந்த காலகட்டத்தில் இருக்கும் பெண்களை கணவனும், குழந்தைகளும் கூடுதல் அரவணைப்புடன் நடத்த வேண்டும். தன்னால் யாருக்கும் உபயோகமில்லை என்ற மன அழுத்தத்தின் காரணமாக அவர்கள் எல்லோர் மீதும் எரிச்சலடைவார்கள். கோபப்படுவார்கள். இதனை வீட்டில் இருப்பவர்கள் புரிந்துகொண்டு எல்லாவற்றிலும் அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் அவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும். முக்கியமாக கணவன் கூடுதல் அக்கறையுடனும், அன்புடனும் நடந்துகொண்டால் இவர்களின் மனநிலை தெளிவு பெறும்.

திருமணம் செய்து கொண்டு வந்த காலம் முதலாய், நம்மை பெற்றெடுத்த நாள் முதலாய் நமக்காக உழைத்து உழைத்து களைத்துப் போன அந்த ஜீவனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது அன்புடன் நடத்தி அவர்கள் அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்து அமைதியாய் வாழ நாமும் நம்மாலான உதவிகளை செய்யலாமே....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக